ஈரோடு: நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தெங்குமரஹடா கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக, மாயாற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
மாயாற்றில் நீர் வரத்து குறைவாக இருக்கும்போது நடந்தும், வாகனங்கள் மூலமும் கிராம மக்கள் கடந்து, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது வழக்கம். மழைக்காலங்களில் மாயாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், கிராம மக்கள் பரிசலில் மறுகரையை அடைய வேண்டியுள்ளது.
இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆபத்தை உணராமல் பரிசலில் மாயாற்றைக் கடந்து சென்று வருகின்றனர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். மழைக் காலங்களில், எங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்காகவும், உயிரைப் பணயம் வைத்து பரிசல் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
நிரந்தர தீர்வாக பாலம் அமைக்க பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டிய நிலையில், மாயாற்றைக் கடக்க உடனடியாக தொங்கு பாலம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.