தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலை.யில் நிதி நெருக்கடி: உயர் நீதிமன்றத்தில் தகவல்

செய்திப்பிரிவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிரமம் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் பல்கலை. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், வடபழஞ்சியைச் சேர்ந்த சேகர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளராக பணிபுரிந்து வந்தேன். என்னை திடீரென பணி நிக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பல்கலைக் கழகம் தரப்பில், பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் உள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க அரசிடம் நிதியுதவி கேட்டுள்ளோம். அனுமதிக்கப்பட்ட 975 பணியிடங்களில், உபரியாக இருந்த 136 பேரின் பணிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. பல்கலைக்கழக வருமானம் குறைந்து, செலவீனம் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணையை ஆக. 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT