சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன  தரிசன விழா தேரோட்டம் நடந்தது. 
தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: சிவசிவா முழக்கத்துடன் கோலாகலம்

க.ரமேஷ்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 27 தேதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

28-ம்தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 29ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 30 ஆம் தேதி வெள்ளி பூதவாகனத்தில் சாமி வீதி உலாவும், கடந்த 1 ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும் (தெருவடைச்சான்), 2 ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 3ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 4 ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடந்தது.

முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த்திருவிழா இன்று (ஜூலை.5) நடைபெற்றது. இன்று அதிகாலை ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் மேளதாளம் முழங்கிட கோயிலில் இருந்து தனித்தனி தேரில் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிவ சிவா என்ற முழக்கத்துடன் ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்களுக்கு முன்னால் சிவ வாத்தியங்கள் முழங்கிட சிவ பக்தர்கள் ஆடியபடியே சென்றனர். ஓதுவார்கள் தேவாரம் திருவாசகம் ஓதியபடியே சென்றனர். கீழ வீதி வடக்கு வீதி மேலவீதி தெற்கு வீதி ஆகியவற்றில் கட்டளைதாரர்கள் ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு படையல் செய்தனர். மேல வீதி வடக்கு வீதியும் இலையும் பகுதியில் பருவத ராஜ குல மரபினர் ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு பட்டுப் போர்த்தி படையல் செய்தனர் தீபாராதனை காட்டப்பட்டது.

சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை ( ஜூலை 6) காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT