தமிழகம்

தூத்துக்குடி | கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ஸ்டார்க் என்ற சரக்கு கப்பல் வந்தது.

இந்த கப்பலின் புரப்பல்லரில் மீன்பிடி வலை, கயிறுபோன்றவை சிக்கி இருந்ததாககூறப்படுகிறது. அவற்றை அகற்றுவதற்காக தூத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தை கப்பல் நிர்வாகத்தினர் அணுகினர்.

தனியார் நிறுவனத்தினர் டைவிங் பயிற்சி முடித்துள்ள தூத்துக்குடி அண்ணாநகர் 8-வது தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் சாம்ராஜ் (27) என்பவரை இப்பணிக்காக அழைத்துச் சென்றனர். சாம்ராஜ், கண்ணன் ஆகிய 2 பேரும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கடல் தண்ணீருக்குள் மூழ்கி சென்று கப்பல் புரப்பல்லரில் சிக்கிஇருந்த வலை, கயிறு போன்றவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாம்ராஜ் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சாம்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று காலை தூத்துக்குடி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சாம்ராஜின் உறவினர்கள் பிரேத பரிசோதனை அறை அருகே திரண்டு, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் பணியில் ஈடுபடுத்தியதால் சாம்ராஜ் இறந்ததாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதன்பேரில் போராட்டத்தை அவர்கள் கைவிட் டனர்.

SCROLL FOR NEXT