தமிழகம்

ஏழை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்துவரும் பள்ளி

க.சக்திவேல்

தமிழகம் முழுவதும் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 11.80 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 1.27 லட்சம் பேரும், கை, கால் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் 2.87 லட்சம் பேரும் உள்ளனர்.

மாற்றுத்திறன் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் படிக்க முடியாத சூழலில், அவர்களுக்கு போதிய அளவிலான அரசு சிறப்பு பள்ளிகளும், ஆசிரியர்களும் இருக்கிறார்களா என்றால் கேள்விக்குறியே.

கல்வி கடைச்சரக்காகிவிட்ட இன்றைய சூழலில், மாற்றுத்திறனாளிகளை தனியார் சிறப்பு பள்ளிகளில் படிக்க வைப்பது சாமானியர்களால் இயலாத காரியம்.

இதன் காரணமாகவே நிறைய பேர் மாற்றுத்திறனாளிகளை வீட் டுக்குள்ளேயே முடக்கிவிடுகின் றனர்.

இந்நிலையில், மாற்றுத்திறன் மாணவர்களும் மற்ற மாணவர்களுக்கு இணையாக கல்வி பயில ஏதுவான சூழலை உருவாக்கி, இலவசக் கல்வி அளித்து வருகிறது சென்னை நொளம்பூரில் உள்ள நேத்ரோதயா பார்வைத் திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி.

“ஊனம் ஒரு குறையல்ல, ஏழ்மைதான் குறை. ஏழ்மையை காரணமாகச் சொல்லி மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வியை புறக் கணிக்கக் கூடாது என்பதற்காகவே இந்தப் பள்ளியை நடத்தி வருகி றோம்’’ என்று கூறுகிறார் பார்வைத் திறன் மாற்றுத் திறனாளியும், நேத்ரோதயாவின் நிறுவனருமான கோவிந்தகிருஷ்ணன்.

இது குறித்து சி.கோவிந்த கிருஷ்ணன் ‘தி இந்து’விடம் மேலும் கூறியதாவது:

“மாற்றுத்திறனாளிகளின் எண் ணிக்கை குறித்த புள்ளி விவரங்கள் இருக்கிறதே தவிர, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் இல்லை.

மாற்றுத்திறனாளிகளை படிக்க வைப்பதால் என்ன ஆதாயம் என்ற மனநிலையும் பெற்றோரிடையே உள்ளது.

கல்வியால்தான் அவர்கள் ஆளுமை பெற முடியும் என்பதை பெற்றோர் உணர வேண்டும். தற்போது பார்வை மாற்றுத்திறனா ளிகள், கை, கால் குறைபாடு உடையோர் தரமான கல்வி எங்கு கிடைக்கும் என திண்டாடி வரு கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நேரத்தில், உரிய வயதில் இலவச மாக கல்வியை அளித்தால், அவர்கள் திண்டாட வேண்டிய அவசியமில்லை.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நேத்ரோதயா பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பொருளாதாரத்தில் பின்தங்கிய பார்வைத் திறன் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி, தங்கும் இடம், உணவு ஆகியவற்றை கடந்த 3 ஆண்டுகளாக இலவசமாக அளித்து வருகிறோம்.

நடப்பு ஆண்டு முதல் அரசு அனுமதியோடு கை, கால் குறைபாடு டைய மாற்றுத்திறன் மாணவர்களை யும் எங்கள் பள்ளியில் சேர்க்க உள்ளோம். நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் நடைபெறும். மாணவர் சேர்க்கை யில் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்கள், கை, கால் குறைபாடுடைய மாற்றுத்திறன் மாணவர்கள் நேத்ரோதயா பள்ளியில் சேர விரும்பினால், 9382896636, 044-26530712, 26533680 என்ற எண்களில் தொடர்பு கொள் ளலாம்.

          
SCROLL FOR NEXT