உயர் நீதிமன்றம், மதுரைக்கிளை. 
தமிழகம்

பாலியல் வழக்கு | நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் மறுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு 

கி.மகாராஜன்

மதுரை: சமூக வலைதளங்களில் பழகிய மாணவிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசியுடைய தந்தையின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவரை சமூக வலைதளங்கள் வழியாக அறிமுகமான மாணவிகள், பெண்களை திருமணம் செய்து கொள்வதாக நெருக்கமாக பழகி ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பண மோசடி செய்தது உட்பட பல்வேறு வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2020 முதல் காசி சிறையில் இருந்து வருகிறார். வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், காசியின் செல்போன், லேப்டாப்பில் இருந்த ஆபாச படங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனை போலீஸார் கைது செய்தனர். இவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில், காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் அவர் நூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பெண்களை ஆசை வார்த்தை கூறி மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்திருப்பதற்கான தடயங்கள் இருந்தன. மேலும் பல்வேறு மாணவிகள், பெண்களின் முழு மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களும் அவர் வைத்திருந்தார் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. இதனால் வழக்கின் 2வது குற்றவாளியான காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT