செய்துங்கநல்லூர் அருகே பள்ளிக் குழந்தை களை ஏற்றிச் சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ. 
தமிழகம்

பள்ளிக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் மரணம்: செய்துங்கநல்லூர் அருகே மேலும் 7 குழந்தைகள் காயம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து நான்கரை வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 7 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பல மாணவ, மாணவிகள் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். நேற்றுகாலை ஊத்துப்பாறை, முத்தாலங்குறிச்சி, வசவப்பபுரம் கிராமங்களைச் சேர்ந்த 8 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ பாளையங்கோட்டைக்கு சென்றது.

ஆட்டோவை நாட்டார்குளத்தை சேர்ந்த ராஜு ஓட்டிச் சென்றார். அனவரதநல்லூர் - வசவப்பபுரம் சாலையில் தென்னம்பாண்டி சாஸ்தா கோயில் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது. அதில் இருந்த குழந்தைகள் அனைவரும் ஆட்டோவுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களின் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஊத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது சிறுவன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் செல்வநவீன் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

முத்தாலங்குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நவீன்குமார் (5), மகள்கள் செல்வராகவி (6), முகிலா (11), பார்வதிநாதன் மகள் குணவதி (4), நல்லதம்பி மகன் இசக்கிராஜா (5), வசவப்பபுரத்தை சேர்ந்த ஆறுமுககுமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

செல்வநவீன்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த குழந்தைகளை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலைமறைவான ஆட்டோ ஓட்டுநர் ராஜுவை முறப்பநாடு போலீஸார் தேடி வருகின்றனர். ஓட்டுநர்செல்போனில் பேசிக்கொண்டே ஆட்டோவை ஓட்டிச் சென்றதாககாயமடைந்த குழந்தைகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT