தமிழகம்

மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு கால நிர்ணயம் செய்ய முடியாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

மடிப்பாக்கம் பகுதி சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011-ல் இணைக்கப்பட்டது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த அய்யம்பெருமாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019-ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு விசாரணையின்போது சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக ரூ.160 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கும்பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பெற்ற பிறகு 6 மாதங்களில் டெண்டர் விடப்பட்டு 36 மாதங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடையும்’ என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, 2020 டிசம்பருக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என காலநிர்ணயம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதன்படி பணிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி அய்யம்பெருமாள், உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் குமணன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‘மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு.

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு கால நிர்ணயம் செய்ய முடியாது. இந்த அவமதிப்பு வழக்கு என்பது உயர் நீதிமன்றத்தின் அரசியல் சாசன அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. அவ்வாறு கால நிர்ணயம் செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்பதால், இதுதொடர்பாக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை முடிவு என்பதால் இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு கால நிர்ணயம் செய்ய முடியாது.

SCROLL FOR NEXT