தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோயில் | ஆனித்திருமஞ்சன உற்சவம்: கொடியேற்றத்துடன் தொடக்கம் 

க.ரமேஷ்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவ கொடியேற்று விழா நடந்தது. கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றினார்.

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று(ஜூன்.27) காலை மேள தாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசகம் பாடி கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாசினம் செய்தனர்.

உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. 28-ம்தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 29ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 30ம் தேதி வெள்ளி பூதவாகனத்தில் சாமி வீதிஉலாவும், ஜூலை 1ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும் (தெருவடைச்சான்), 2ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 3ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 4ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

5ம் தேதி முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த்திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 6ம் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். டிஎஸ்பி.ரமேஷ்ராஜ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

படவிளக்கம்- சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தையொட்டி கொடியேற்று விழா நடந்தது.

SCROLL FOR NEXT