உதகை: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சிறு, குறு தேயிலை விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தோட்டங்களில் பசுந்தேயிலையை பறித்து தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கின்றனர். உதகை, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால்,தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டுள்ளன. தேயிலை மகசூலும் அதிகரித்துள்ளது.
மேலும், பசுந்தேயிலை பறிக்க போதுமான தொழிலாளர்கள் கிடைக்காததால், அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், தேயிலை முற்றி கரட்டு இலையாக மாறிவிடுகிறது.
இந்நிலையில், பெறப்படும் பசுந்தேயிலை முழுவதையும் அரவை செய்ய முடியாததால், சில தொழிற்சாலைகள் தேயிலை கொள்முதலை நிறுத்திவிட்டன. சிலதொழிற்சாலைகள் வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே பசுந்தேயிலையை கொள்முதல் செய்கின்றன. இதனால், தேயிலையைவிநியோகிக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அறுவடை செய்த தேயிலையை சாலையோரம், தோட்டங்களில் கொட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யாததால், தேயிலையை வீணாக கொட்டி வருகிறோம். இதனால் நஷ்டம் ஏற்பட்டுவருகிறது. இதுதொடர்பாக தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.