தாம்பரத்தில் தொடர்கதையாகும் போக்குவரத்து நெரிசல் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு என்பதை முன்னிறுத்தி அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் தொகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் என பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் எஸ்.ஆர்.ராஜா, அதிமுக சார்பில் சிட்லபாக்கம் சி.ராஜேந்திரன், தேமுதிக சார்பில் மா.செழியன், பாமக சார்பில் ஆர்.சுரேஷ்குமார், பாஜக சார்பில் ஏ.வேதா சுப்ரமணியம், நாம் தமிழர் கட்சி சார்பில் பி.நாகராஜன், எஸ்டிபிஐ சார்பில் எஸ்.முகமது பிலால், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பி.ஆறுமுகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பகலில் வெயில் சுட்டெரிப்பதால், பிரச்சாரத்தை வேட்பாளர்கள் காலை 6 மணிக்கே தொடங்கிவிடுகின்றனர். அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் சி.ராஜேந்திரன் நேற்று காலை கிழக்கு தாம்பரத்தில் 11, 12, 14-வது வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அவர் கூறும்போது, ‘‘அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது’’ என்றார்.
திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா திருநீர்மலை கடப்பேரி பகுதியில் 1, 38, 39-வது வார்டுகளிலும், மாலையில் ரெங்கநாதபுரம் பகுதியிலும் மேளதாளம் முழங்க கூட்டணி கட்சி நிர்வாகிகள், தலைவர்களுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்.
தேமுதிக வேட்பாளர் மா.செழி யன் மதியம் 11 மணி அளவில் திருநீர்மலை கடப்பேரி பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அற்புதம் நகர், சுந் தரம் காலனி, ராஜீவ்காந்தி நகர், கன்னடபாளையம், குன்றுமேடு, புலிக்கொரடு உள்ளிட்ட பகுதி களில் கூட்டணி கட்சிகளான விடு தலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூ னிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று ஆதரவு கோரினார். அவர் கூறும்போது, ‘‘குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், மெட்ரோ ரயில் சேவையை தாம்பரம் வரை நீட்டிப்பது, கிழக்கு தாம்பரம் மேற்கு தாம்பரம் இடையே பாதசாரிகளுக்கு நடைபாலம், அரசு கலைக் கல்லூரி போன்றவற்றை மையப்படுத்தி பிரச்சாரம் செய்கிறேன்’’ என்றார்.
பாமக வேட்பாளரான வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார் காலை 6 மணி அளவில் செம்பாக்கம், சிட்லபாக்கம் பகுதி வார்டுகளில் பிரச்சாரம் செய்தார். பாமகவின் பிரதான கொள்கையான பூரண மதுவிலக்கை மையப் படுத்தி வாக்கு சேகரித்தார். ‘‘தின மும் தாம்பரத்தில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, கழிவுநீர் வடிகால் வசதி, பாதாள சாக்கடை திட்டம், ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்ஆதா ரங்களை பாதுகாப்பது, வெளியூர் பயணிகளின் வசதிக்காக தாம் பரத்தில் இலவச தங்கும் வசதி, மினி பஸ் சேவை ஆகியவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகிறேன்” என்றார்.
பாஜக வேட்பாளர் ஏ.வேதா சுப்ரமணியம் ஒவ்வொரு பகுதி யிலும் இருக்கும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பொதுநலச்சங்க நிர்வாகிகள், சாதி சங்க தலைவர்கள், இளைஞர் மன்ற நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்கிறார். நேற்று கிழக்கு தாம்பரத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்தின் உதவி பங்குத்தந்தை சுரேஷ்குமார், மேத்யூ சிஎஸ்ஐ ஆலய போதகர் டேவிட் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக, சுந்தரம் காலனி, சிட்லபாக்கம் 15, 17, 18 -வது வார்டு களிலும், ஏரிக்கரை தெரு பகுதியிலும் வாக்கு சேகரித்தார். ‘‘தாம்பரத்தில் தொடர்கதையாகும் போக்குவரத்து நெரிசல் பிரச்சி னைக்கு தீர்வு காண சுற்றுவட்ட சாலை அமைப்பது, மத்திய அரசு உதவியுடன் அரசு மகப்பேறு மற் றும் மகளிர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்து வமனை, பிரதமரின் முத்ரா வங்கி திட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடன் உதவி, இளைஞர், மகளிர் திறன் மேம்பாட்டு மையம் என பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகிறேன்’’ என்றார்.
21 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
தாம்பரம் தொகுதியில் மொத்தம் 416 வாக்குச்சாவடிகளும், 76 வாக்கு மையங்களும் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 21 பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தாம்பரம் கோட்டாட்சியரும், தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜி.விமல்ராஜ் தெரிவித்தார்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசின் நுண் பார்வையாளர்களும் அவசியம் ஏற்பட்டால் ஆயுதம் தாங்கிய போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.