பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சைனாவரம் கிராமத்தில் பழமையான காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்தன.
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறநிலையத் துறையினர் நடவடிக்கை
அந்த உத்தரவின் அடிப்படையில், போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத் துறையின் வேலூர் இணை ஆணையர் லட்சுமணன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று சைனாவரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதில், 14.51 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள், அந்நிலத்தில் உள்ள 12 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இந்நடவடிக்கையில், சுமார் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டன.இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சித்ரா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.