தமிழகம்

கோயிலுக்குச் சொந்தமான 28,000 ஏக்கர் நிலங்களைப் பாதுகாக்கக கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வேதாரண்யம் வேதபுரீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான 28 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை பாதுகாக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அருள்மிகு வேதபுரீசுவரர் கோயிலுக்குச் சொந்தமாக 28,609.06 ஏக்கர் நிலம் இருப்பதாக அரசு மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை முறையாக பாராமரித்து பாதுகாக்க கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனுக்கள் அளித்துள்ளேன். எனது மனுக்களை முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT