சென்னை: நீரிழிவு நோய் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோய் காரணமாக விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. இது தொடர்பாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்.
விஜயகாந்த் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.