ராணிப்பேட்டையில் குரோமியக்கழிவுகளை அகற்றுவது தொடர்பான அமைச்சர்கள் மெய்யநாதன், ஆர்.காந்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அருகில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர். 
தமிழகம்

அடுத்த 10 ஆண்டுகளில் காடுகளின் பரப்பளவை 33% உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ கத்தில் உள்ள காடுகளின் பரப்பளவு 27 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்துவது தமிழக அரசின் தொலை நோக்கு திட்டமாக உள்ளது என சுற்றுச் சூழல் - காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் சிப்காட் தொழில் வளாகம் தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள குரோமியம் திடக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது குறித்தும், வாலாஜா சுங்கச்சாவடி அருகே உள்ள சவுத் இந்தியன் தோல் தொழிற்சாலை முகவர் அசோசியேஷன் தோல் பொருட் களின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் மெய்ய நாதன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் இயங்கி வந்த தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடந்த 1995-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையை சுற்றி 5.5 ஏக்கர் பரப்பில் 5 மீட்டர் முதல் 7 மீட்டர் உயரத்தில் இரண்டரை லட்சம் டன் குரோமியக்கழிவுகள் தேங்கியுள்ளன.

இதனை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல கட்ட ஆலோ சனைகளை நடத்தி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கழிவுகளை அகற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதற்கான நிதி ஆதாரங்களை திரட்டி ஐஐடி போன்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி குரோமிய கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி சிறப்பாக உள்ளது. இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

தமிழகத்தில் வனப்பரப்பை விரிவாக்கம் செய்ய காடுகளில் உள்ள வெளிநாட்டுச் செடிகளை அகற்றி நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யவும், காலி இடங்களில் 1,000 மரக்கன்று நட இந்த ஆண்டு 10 ஆயிரம் இடங்களில் குறுங்காடுகள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வரும் 10 ஆண்டுகளில் 260 கோடி மரங்களை தமிழகத்தில் நடவு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம் வகுத்துள்ளார். இதை செயற்கைக்கோள் மூலம் கண் காணிக்கவும் குழு தொடங் கப்படவுள்ளது. தமிழகத்தில் கல்வி, பொருளாதாரம் வளர்ச்சியை தொடர்ந்து, தொழிற்சாலை வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் கராணம். தொழிற்சாலைகளை சுற்றி வெளிநாட்டு மரங்களை நடவு செய்யக்கூடாது. நம் நாட்டின் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

அதிகளவில் மரங்கள் இருந் தால் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது. அடுத்த 10 ஆண்டு களில் தமிழகத்தில் உள்ள காடுகளின் பரப்பளவு 27 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்துவது தமிழக அரசின் தொலை நோக்கு திட்டமாக உள்ளது’’ என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT