சென்னை: சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் 6 வாரங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், “சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகள் இல்லை.
பல மெட்ரோ ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் முறையாக இயங்குவதி்ல்லை. இதனால் பயணிகள் நீண்ட உயரத்தில் உள்ள படிக்கட்டுகளில் ஏறி, இறங்க சிரமமடைந்து வருகின்றனர். அதுவே மாற்றுத் திறனாளிகள் எனி்ல் அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாக நேரிடுகிறது.
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதி்ல் அணுகும் வகையிலான வசதிகள் இல்லை. இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நல மாநில ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில், “ஏற்கெனவே சென்னையில் பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இன்னும் 6 வாரங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படும். புதிதாக கட்டப்படும் ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் கட்டப்படும்” என உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.