விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபானத் தொழிற்சாலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் அமைந்துள்ள இந்த மதுபான தொழிற்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் இருந்து 4 காரிகளில் வந்துள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் இன்று காலை மதுபான தொழிற்சாலைக்குள் அதிரடியாக நுழைந்து, அங்கு மதுபான உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்து கொண்டு அந்த ஊழியர்களை அனைவரையும் தனி இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்தி வரும் இச்சோதனையால் மதுபான உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை நடைப்பெற்று வருகிறது.