தமிழகம்

பணம் கொடுப்பதை தடுக்காதது தேர்தல் ஆணையத்தின் தோல்வி: ப.சிதம்பரம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்காதது தேர்தல் ஆணையத்தின் தோல்வியைக் காட்டுகிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் புதுக்கோட்டை தொகுதியில் வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் "வாகனங்களிலே சோதனை செய்வது, வீடுகளிலே உள்ள பணத்தை எடுப்பது என்பது ஒரு வகையான வெற்றி போல தெரியலாம். ஆனால் உண்மையிலே தேர்தல் கமிஷன் வெற்றி என்று சொல்ல வேண்டும் என்றால் பணம் கொடுப்பதையும், பணம் வாங்குவதையும் தடுத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. ஆகவே இது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்று தான் சொல்ல வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு தேர்தலை ஒத்திவைப்பதில் பயன் கிடையாது. ஒரு தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பிறகு, பணம் பட்டுவாடா ஆகியிருக்கிறது என்று தெரிந்தால் அத்தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் கொடுத்தவர்களின் பணமும் போச்சு, வாக்குபதிவு ரத்தாகிறது.

நாடு முழுவதும் 232 தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 19ம் தேதி நடத்தி என்ன பயன் இருக்கிறது.

ரூ.570 கோடி தமிழகத்தில் ஒரு வங்கி கிளையில் இருந்து ஆந்திராவில் வங்கி கிளைக்குப் போவது என்பது ஒரு அரிய வியப்பிற்குரிய செய்தி. ஆகவே இதனை ஒரு முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக பெரும்பான்மை கிடைக்கும்" என்று தெரிவித்தார் ப.சிதம்பரம்

          
SCROLL FOR NEXT