திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் நீண்ட நேரமாகியும் வராததால் பிரசவித்த இளம் பெண் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்டது.
திருவாரூர் அருகே, தேவர்கண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜாபர் - மும்தாஜ் பேகம் தம்பதியினரின் மகள் பர்வீன் பானு (23) இவருக்கும், கும்பகோணம் பகுதியை சேர்ந்த பரக்கத்துல்லா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில், பர்வீன்பானு கர்ப்பமடைந்தார். இந்நிலையில், தனது முதல் பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்த பர்வீன் பானு, பிரசவ வலி ஏற்பட்டு, கடந்த 7ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த 11ம் தேதி அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால் அவர் தொடர் சிகிச்சையில் அரசு மருத்துவமனையில் இருந்தார். இந்நிலையில் இன்று காலை முதல் பர்வீன் பானு உடல் சோர்வுடன் காணப்பட்டார்.
இதுதொடர்பாக பணியில் இருந்த செவிலியர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் வந்தவுடன் பார்க்க சொல்கிறோம் என செவிலியர்கள் தெரிவித்தனர். வெகுநேரமாகியும் மருத்துவர் வராத நிலையில் பர்வீன் பானு உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பணியிலிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பதட்டம் ஏற்படாமலிருக்க 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.