சென்னை: வாரத்துக்கு 2 நாள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 27-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வங்கிகளுக்கு வாரத்தில் சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை தொடர்பாக, கடந்த 2015-ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், இதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. எனவே, வங்கிகளுக்கு வாரத்துக்கு 2 நாள் விடுமுறை விடவேண்டும்.
கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பங்களிப்பு தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கத்தோலிக் சிரியன் வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ம் தேதி அகில இந்திய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
வரும் 25-ம் தேதி 4-வது சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்கள் வார விடுமுறையாகும். மறுநாள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளில் பரிவர்த்தனைகள் எதுவும் நடக்காது. எனவே, 3 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.