திருவண்ணாமலை வட்டாட்சியர் அறையில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மீண்டும் வைக்கப்பட்டது. 
தமிழகம்

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் படங்கள் திடீர் அகற்றம்: அதிமுகவினர் திரண்டதால் சலசலப்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரது புகைப் படங்கள் அகற்றப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை வட்டாட் சியர் அலுவலகத்தில் உள்ள வட்டாட்சியரின் அறையில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் பிரதமர்கள் உள்ளிட்டோரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கிருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெய லலிதா மற்றும் பழனிசாமியின் படங்கள் திடீரென அகற்றப்பட்டன.

இதையறிந்த அதிமுகவினர், வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். மேலும் அவர்கள், அகற்றப்பட்ட முன்னாள் முதல்வர் களின் படங்களை மீண்டும் வைக்கவில்லை என்றால், முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். அப்போது வட்டாட் சியர் அலுவலகம் முன்பு ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

அதிமுக பிரமுகர்களின் எச்சரிக்கையை அடுத்து, வட்டாட்சியரின் அறை யில் முன்னாள் முதல்வர்கள் ஜெய லலிதா மற்றும் பழனிசாமியின் படங்கள் மீண்டும் வைக்கப்பட்டன.

இதற்கிடையில், ஜமாபந்தி நிறைவு விழா முடிந்து வந்த ஆட்சியர் பா.முருகேஷிடம், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர் செல்வம், பழனிசாமி ஆகியோரது படங்களை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அகற்றப்பட்ட படங்களை மீண்டும் வைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டு மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பா.முருகேஷ், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

          
SCROLL FOR NEXT