விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் 50-வதுஆண்டில் (2019-2020) படித்த மாணவர்களுக்கான பட்டமேற்பு விழா நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை யில் நடைபெற்றது. இவ்விழாவில் எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், வேலூர் மண்டல கல்விக்குழு இணை இயக்குநர் காவேரியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: முன்பு, ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூரில்அரசு கலைக் கல்லூரியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் இயங்கி வந்தது. அப்போதெல்லாம் கள்ளக்குறிச்சியில் இருந்தும் கடலூர், சிதம்பரம் சென்று படித்தனர்.
1968-ம் ஆண்டு விழுப்புரத்தில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்பட்டது. அப்போது சென்னை பலகலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட இக்கல்லூரி பின்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்குப் பின் அண்ணாமலை பல்கலைக் கழகம் மூலம் பட்டம் பெறுவீர்கள்.
ஆரம்ப கல்வியை கொண்டுவந்தது காமராஜர் அரசாக இருந்தாலும், 3 கிலோமீட்டருக்கு ஒரு பள்ளி; 5 கிலோமீட்டருக்குள் 8-ம் வகுப்பு வரை ஒரு பள்ளி என்று விரிவுபடுத்தியது கருணாநிதி தலைமையிலான அரசு தான்.நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
அது மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கானது என்றே வைத்துக்கொள்வோம். தற்போதுக்யூட் (CUET) தேர்வு எழுதினால்தான் உயர்கல்வி பயில முடியும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்புகுரல் கொடுத்திருக்க வேண்டாமா? நம் மொழி மீதான காதலால் தமிழ்தாய் வாழ்த்து தொடங்கி,அரசு தேர்வுகளும் தமிழில் எழுத வேண்டும் என்று இந்த அரசுதமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றார்.