தமிழகம்

‘திராவிட மாடல்' என்றால் என்ன? - எனக்கு ஒன்றும் புரியவில்லை: திமுகவினரை குற்றம்சாட்டி சசிகலா கருத்து

செய்திப்பிரிவு

விழுப்புரம்: திமுகவினர் ‘திராவிட மாடல்’ என்று கூறி வருகின்றனர். தற்போதுவரை, எனக்கு ‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்று எனக்கு புரியவில்லை என்று சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் தனது ஆதரவாளர் இல்ல விழாவில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

‘அதிமுகவின் தலைமையை நான் ஏற்க வேண்டும்’ என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதற்காக செயல்பட்டு வருகிறேன். அதிமுக இப்படி இருப்பதால் திமுகதான் பயனடைகிறது. அதிமுக இணைவதை திமுகவினர் விரும்பமாட்டார்கள். இதேநிலை நீடிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். 38 ஆண்டுகால அனுபவம் கொண்ட நான் விரைவில் அதிமுகவை வழி நடத்துவேன்.

குற்றங்கள் அதிகரிக்க காரணம்

கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது‌. 600-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. குறிப்பாக சென்னையில் அதிகப்படியான கொலைகள் நடந்துள்ளன. சென்னை பெருநகர ஆணையர் அலுவலகம் மூன்றாகபிரிக்கப்பட்டதும் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

திமுகவினர் ‘திராவிட மாடல்’ என்று கூறி வருகின்றனர். தற்போதுவரை, எனக்கு ‘திராவிட மாடல்’என்றால் என்ன என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏழை, எளியோரை முன்னேற்ற வேண்டுமென்று என்று எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினர். சமத்துவக்காக பாடுபட்டனர். எங்களைப் பொறுத்தவரையில் அது தான் சிறந்த மாடல்.

அதிமுகவின் கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அப்படி சொல்பவர்கள் திமுகவினருக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள். அதிமுகவை காப்பது பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டுமே தவிர, இருப்பவர்களை விரட்டியடித்து கட்சியை பலவீனப்படுத்தக் கூடாது.

தலைமை ஏற்பேன்

சென்னை வானகரத்தில் நடக்கவிருப்பது உண்மையான அதிமுக செயற்குழு கூட்டம் கிடையாது. எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஏற்பட்ட அதே சோதனைகள்தான் தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பெண்கள் சேர்ந்து அப்போது கட்சியை மீட்டெடுத்து முன்னேற்றினோம். விரைவில் இதனை சரி செய்து, என் தலைமையின் கீழ் அதிமுகவை கொண்டு வருவேன். இவ்வாறு சசிகலா கூறினார்.

SCROLL FOR NEXT