மேகமலை பள்ளத்தாக்கு பகுதிகளை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். 
தமிழகம்

மேகமலையில் பாதுகாப்பற்ற பள்ளத்தாக்கு: ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

மேகமலை சுற்றுலாத்தல பள்ளத்தாக்குப் பகுதிகளில் வனத் துறையினரின் கண்காணிப்போ, வழிகாட்டலோ இல்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியின் ஆபத்தை உணராமல் நெருங்கிச் சென்று ரசிக்கும் நிலை உள்ளது.

தேனி மாவட்டம் சின்ன மனூருக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந் துள்ளது மேகமலை. 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்த இப்பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, மகாராஜாமெட்டு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.

தனியார் நிறுவனங்களின் தேயிலைத் தோட்டங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. சரிவுகளில் அமைந்துள்ள தேயிலைச் செடிகள், மிக அருகில் கடந்து செல்லும் மேகங்கள், சில்லென்ற பருவநிலை ஆகியவற்றுக்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இதற்காக மேகமலை வன உயிரின சரணாலயத்தால் சூழல் சுற்றுலா மேம்பாட்டுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகாராஜாமெட்டு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.30, 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவுப் பகுதியில் கட்டணம் பெறுவதோடு சரி. சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டவோ, விளக்கம் அளிக்கவோ உரிய அலுவலர்கள் இங்கு இல்லை. இதனால் பலரும் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வெகு அருகில் செல்வதுடன், புகைப்படம் எடுப்பதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

கவனமற்ற இந்நிலையினால் சுற்றுலாப் பயணிகள் தவறி பள்ளத்தாக்கில் விழும் அபாயம் உள்ளது. எனவே வனத் துறையினர் இப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT