தமிழகம்

கீழடியில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுமா? - தொல்லியல் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

திருப்புவனம்: மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் கீழடி அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு உள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டுமுதல் அகழாய்வு நடந்து வருகிறது. தற்போது 8-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது.

தொல்பொருட்களை பொது மக்கள் பார்வையிட வசதியாக கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் அமைக் கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

இது தவிர, கீழடியில் ஒரு ஏக்கரில் அகழாய்வு நடக்கும் இடத்திலேயே திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கப்பட உள்ளது. இப்பகுதி சுற்றுலாத்தலமாக அறி விக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழர்களின் தொன் மையை அறிந்து கொள்ள தினமும் ஏராளமானோர் கீழடிக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச் சாலையிலிருந்து கீழடிக்குப் பிரிந்து செல்லும் சாலை சந்திக்கும் இடத்தில் பேருந்து நிறுத்தம் இல்லை. பெரும்பாலான பேருந்துகள் இங்கு நின்று செல்வதில்லை. ஒரு சில நகர பேருந்துகள் மட்டுமே கீழடிக்கு வந்து செல்கின்றன. வெளியூர்களில் இருந்து வரும் தொல்லியல் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கார், மோட்டார் சைக்கிளில் மட்டுமே கீழடிக்குச் செல்லும் நிலை உள்ளது.

எனவே, இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைத்து, அவ்வழியாக வரும் அரசு, தனியார் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வழிச் சாலை சந்திப்பு இடத்தில் விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT