கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்த நகைகள் செய்யும் பொற்கொல்லர் ஒருவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 729 மில்லி கிராம் தங்கத்தில் கருணாநிதி உருவத்தை வடித்துள்ளார். இதை முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் வழங்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன் பிள்ளை தெருவில் வசிப்பவர் முத்துக்குமரன் (40). இவர் 12-வது வயதிலிருந்து தனது தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகைகள் செய்து வருகிறார். அந்த அனுபவத்தினால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகை மற்றும் பொருள்களை செய்யும் பணியில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
இவர் கடந்த 2020 ஏப்ரலில் 530 மில்லி கிராம் தங்கத்தில் கரோனாவால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறை, முகக்கவசம், இந்தியா வரைபடம் ஆகியவை அடங்கிய குழுவை வடித்தார்.
மேலும், 660 மில்லி கிராம் தங்கத்தில் 2020 ஆண்டு 12 பக்க காலண்டரையும், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் 1 கிராம் 420 மில்லி தங்கத்தில் இந்திய நாடாளுமன்ற கட்டிட உருவத்தையும், 120 மில்லி கிராம் தங்கத்தில் ஓட்டு விற்பனை இல்லை என்ற பதாகையும், 20 மில்லி தங்கத்தில் மை வைத்த விரல் உருவத்தையும் செய்து அசத்தியுள்ளார்.
கடந்த 2018 ஆண்டு புகழ்பெற்ற சவுதியில் உள்ள மெக்கா, மதினா உருவங்களை 640 மில்லி கிராமில் 1 செ.மீட்டர் உயரத்தில் தங்கத்திலும், மேலும் அதனுடன் அல்லாஹ் வார்த்தையை 10 மில்லி கிராம் தங்கத்தில் செய்துள்ளார். சென்ற ஆண்டு கிருஸ்துமஸ் பண்டியையெட்டி 2 கிராம் 790 மில்லி கிராம் தங்கத்தில், 1.5 இன்ச் நீளமும், 1 இன்ச் உயரம் மற்றும் அகலத்தில் மிகச்சிறய அளவிலான வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்து பலரது பாராட்டை பெற்றார்.
இந்த நிலையில், இவர் கடந்த 2 நாட்களாக முயற்சி செய்து மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உருவத்தை 3 செ.மீட்டர் உயரத்திலும், 3 செ.மீட்டர் அகலத்திலும் 630 மில்லி கிராமம் தங்கத்திலும், கலைஞர் என்பதை 99 வயதைக் குறிக்கும் வகையில் 99 மில்லி கிராம் தங்கத்திலும் ஆக மொத்தம் 729 மில்லி தங்கத்தில் செய்துள்ளார்.
இது குறித்து பொற்கொல்லர் முத்துக்குமரன் கூறும்போது, "கடந்த சில ஆண்டுகளாக தங்க நகைகள் செய்வதில் இயந்திர பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொற்கொல்லர்களின் தொழில்கள் கீழ்நிலையை நோக்கி செல்கிறது. இதனால் பல தொழிலாளர்கள் நிலமை கஷ்டமான சூழலில் உள்ளது.
எனவே இந்த தொழிலை மேம்படுத்தும் விதமாக கைகளாலும் இதுபோன்ற நுணுக்கமான முறையில் செய்யலாம் என்பதை வலியுறுத்துவதற்கும், அதே நேரத்தில் நாட்டில் அனைத்து செயல்களிலும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செய்து வருகிறேன்.
தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்காகவும் உழைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டும் திமுக அரசு பதவி ஏற்று ஓர் ஆண்டு ஆவதை குறிக்கும் வகையில் இதனை செய்துள்ளேன். இதனை நான் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வழங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது" என்று முத்துக்குமரன் கூறியுள்ளார்.