மதுரை: குட்கா வழக்கில் தலைமறைவாக இருப்பவர் முன் ஜாமீன் பெறும் வரை காத்திருப்பதா என கேள்வி எழுப்பி வத்தலகுண்டு போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்றதாக அஜ்மல்கான் என்பவர் உட்பட இருவர் மீது வத்தலகுண்டு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அஜ்மல்கான் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார் என்பதால் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே, குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன் ஜாமீன் கோரிய அஜ்மல்கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன் ஜாமீன் தொடர்பான வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனுதாரர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் முன் ஜாமீன் பெறுவதற்காக போலீஸார் காத்திருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியதுடன் போலீஸாரின் இந்த செயல் கண்டனத்துக்குரியது என கூறினார். குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், இந்த வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் வழக்கு விசாரணையை வேறு காவல் நிலையம் அல்லது பணியில் சிறப்பாக செயல்படும் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.