மதுரை: கைரேகைக்குப் பதிலாக கருவிழி பதிவு அடிப்படையில், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் அரிசி மூட்டைகள் மழையால் சேதம் அடையாமல் பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ரேஷன்கடைகளில் அரிசி கடத்தலை தடுக்கசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறைஅதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
ரேஷன் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர். அரிசிகடத்தலைத் தடுக்கும் விதமாக, கூடுதலாக திருச்சி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு 2 எஸ்பி-க்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 286 குடோன்களில் இருந்து கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைகள் எந்தகுடோனில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரியாததால், அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. இதனை தடுக்கும் விதமாக 286 குடோன்களில் இருந்து செல்லக்கூடிய அரிசி மூட்டைகளில் புதிதாக குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி கடத்தலை தடுக்க முடியும்.
ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னனு பதிவேட்டில் (கைரேகை) அவ்வப்போது கோளாறு ஏற்படுகிறது. அதனால், மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சாத்தியமானால், அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை பரிந்துரை செய்கிறாரோ அந்த நபரின் பெயரை சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் பொருள் வாங்க அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.