சென்னை: ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு தொழில் உரிமம் பெற 21 நிபந்தனைகளுடன் கூடிய விதிகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் முறையான அனுமதி பெறாமல் விதிகளை மீறி ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு செயல்பட்டு வருகின்றன. சென்னை காவல் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து இதுபோன்ற மையங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கான தொழில் உரிமம் பெறுவதற்கு புதிய விதிகளை மாநகராட்சி சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.
இதன்படி, தொழில் உரிமை பெறுவதற்கு ஒற்றை சாளர முறையில் சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகிய துறைகள் அடங்கிய குழுவினர் அனுமதி அளிப்பார்கள். குறிப்பாக ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் உரிமம் பெற 21 நிபந்தனைகள் மற்றும் செயல்படுவதற்கான 27 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நெறிமுறைகள்:
கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. செயல்படும் நேரத்தில் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது.
வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு இருக்க வேண்டும்.
எந்த வகையிலும் பாலியல் தொழில் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை.
காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்வார்கள்.
CCTV கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.
தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது.
ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் பணியாளர் தனது கையினை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்தவருக்கு சேவை வழங்கவேண்டும்.
ஒருவருக்கு சேவை வழங்கிய பின் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன் கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.
உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்.
இவை உள்ளிட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு இன்று நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.