தாம்பரம் அருகே அகரம் தென் ஏரியில் வெளியேறும் உபரி நீர் ஒடையில் ரூ.3.42 கோடியில் புதிதாக பாலம் கட்டும் பணிகள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்று வருகிறது.படம்:எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

தாம்பரம் அருகே உள்ள அகரம் தென் ஏரி ஓடையில் ரூ.3.42 கோடியில் பாலம் கட்டுமானப் பணி

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் அருகே அகரம் தென் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஓடையில் ரூ.3.42 கோடியில் புதிதாக பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கலங்கள் வழியாக அகரம்தென் ஒடை மூலம் ஒட்டியம்பாக்கம் ஏரிக்குச் செல்கிறது. உபரிநீர் கலங்கல் வெளியேறும் பகுதியின் இருபுறமும் அன்னை சத்யா நகர், அம்பேத்கர் நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தால் இந்தச் சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாது. மாற்று வழியில்தான் செல்ல வேண்டும். இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து ஓடையின் மீது பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

இந்நிலையில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ், ரூ.3.42 கோடி மதிப்பில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் இங்கு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கின. மொத்தம், 8.5 மீட்டர் அகலம், 6.6 மீட்டர் நீளம், 7 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதத்துக்குள், பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT