புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம் பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

ரசாயன கல்லில் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் இணைந்து பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள இரு மொத்த விற்பனை கடைகளில் ரசாயன கல் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடையின் பின்புறம் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 பெட்டிகளில் இருந்த 1 டன் ஒட்டு மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘பெரிய மார்க்கெட்டில் கடையுடன் கூடிய கிடங்கில் இருந்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அந்த கடை, கிடங்கு ஈஸ்வர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவருக்கு நாளை (இன்று) நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். மேலும் பெரிய மார்க்கெட்டில் உள்ள ஒரு கடைகளில் கூட பெயர் பலகையோ, உரிமையாளரின் தொடர்பு எண்ணோ இல்லை. இதனால் யார் கடை நடத்துகிறார்கள்? யார் உரிமையாளர்? என்பது தெரியவில்லை. ஆகவே கடைகளில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்த வேண்டுமென நகராட்சி அதிகாரியிடம் தெரிவித்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை இன்று அழிக்கவுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT