திருப்பூர்: தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாள்(89), உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
செய்தித்துறை அமைச்சராக இருப்பவர் மு.பெ.சாமிநாதன். இவர் திருப்பூர் மாவட்டம் முத்தூரைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பெருமாள்சாமி கவுண்டர், தங்கமணி அம்மாள். இந்த தம்பதிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உட்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அமைச்சரின் தாயார் தங்கமணி அம்மாள், கடந்த சில நாட்களாகஉடல் நலம் குன்றியிருந்த நிலையில் நேற்று காலமானார். இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முத்தூர் திரும்பினார்.
அங்கு திரண்டிருந்த கட்சியினர், பொதுமக்கள் தங்கமணி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன்னை இத்தனை ஆண்டு காலம் போற்றி வளர்த்த, தன் வளர்ச்சியைக் கண்டு உவகையும், பெருமையும் கொண்ட அருமை தாயாரை இழந்து நிற்கும் சாமிநாதனின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். அன்னையின் இழப்பால் மனம் அல்லலுற்றுள்ள அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.