தாம்பரம்: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய திட்டம் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
அதன்படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் சேலையூர் சுடுகாடு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை பணி தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மேயர் க.வசந்தகுமாரி மற்றும் துணை மேயர் கோ.காமராஜ், உதவி செயற்பொறியாளர் பெட்ஸி ஞானலதா, மாநகராட்சி நல அலுவலர் ரா.பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையாவிடம் மேயர் வசந்தகுமாரி கோரிக்கை மனுவை அளித்தார். அதில், “5 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் அன்றாட பணிகளான சுகாதாரப் பணிகள், குடிநீர், தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கும், மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும் போதுமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளது. எனவே தாம்பரம் மாநகராட்சிக்கு தேவையான உதவியாளர்கள், செயற் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.