தனியார் கப்பல் கட்டும் தளம் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்கள். 
தமிழகம்

காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் பணி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கைது

செய்திப்பிரிவு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் தளம், துறைமுகம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, பழவேற்காடு பகுதி மீனவ மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1,750 மீனவ இளைஞர்களுக்கு தனியார் கப்பல் கட்டும் தளம் உள்ளிட்டவற்றில் பணி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதில், முதற்கட்டமாக 250 பேருக்கு பணிவழங்கப்பட்டு அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 1,500 பேருக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழவேற்காடு பகுதி மக்கள் கடந்த ஜனவரி 31-ம் தேதிபோராட்டம் நடத்தினர். அப்போது, மாவட்ட நிர்வாகம், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.

அதன்படி உரிய தீர்வு காணப்படாததால், நேற்று பழவேற்காடு, லைட்ஹவுஸ், தாங்கல்பெரும்புலம் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 12-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று காட்டுப்பள்ளி தனியார் கப்பல் கட்டும் தளம் உள்ளிட்டவற்றின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ‘‘அரசு அறிவித்தபடி காட்டுப்பள்ளி தனியார் கப்பல் கட்டும் தளம் உள்ளிட்டவற்றில் 1,500 மீனவ இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஏற்கெனவே பணியில் உள்ள 250 பேரின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். பழவேற்காடு கடலோர மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தனியார் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது’’ என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மீனவ மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தனியார் கப்பல் கட்டும்தளம், தங்கள் நிறுவனத்தை ஒட்டியுள்ள 200 மீட்டர் சுற்றளவில் மீனவ மக்கள் போராட்டம் நடத்தாமல் இருக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதால், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேரை, காட்டூர் போலீஸார் கைது செய்து, அவர்களை மாலையில் விடுவித்தனர்.

SCROLL FOR NEXT