தமிழகம்

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலத்துக்கான பிரம்மாண்ட தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்துக்கான பிரம்மாண்டத் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. இப்பாலத்தில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் 2018-ம் ஆண்டு அறி வித்தது.

தொடர்ந்து ரூ. 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கன்னியாகுமரியில் 1.3.2019-ல் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் பாம்பன் ரயில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

11.8.2019 அன்று பூமி பூஜை யுடன் பாலப் பணிகள் தொடங்கின. இதற்காக, இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறைத் துளைப்பான் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய பாம்பன் ரயில் பாலத் துக்கான திட்டச் செலவு ரூ. 279.9 கோடி. பாலத்தின் நீளம் 2078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. இந்தத் தூண்களின் இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன. பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைய உள்ளது.

ரயில்வே நிர்வாகம் 31.09.2021-க்குள் புதிய ரயில் பால பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக பாலப் பணிகள் சில மாதங்கள் தடைப்பட்டதால் பணிகள் நிறைவடையவில்லை.

மேலும் பாம்பன் வடக்கு கடல்பகுதியில் காற்றின் வேகத்தால் பாலப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட மிதவை மற்றும் கிரேன்கள் அடிக் கடி அருகேயுள்ள பாம்பன் ரயில் பாலத்தில் மோதின.

இதனால் புதிய ரயில் பாலத் தூண்கள் அமைக்கும் பணி தற் காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால் 2-வது முறையாக நிர்ணயிக்கப்பட்டு இலக்கு முடிவதற்குள் பணிகளை முடிக்கவில்லை. அதே சமயம், தற்போது புதிய ரயில் பாலத் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தூண்களின் மீது கர்டர்கள் பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT