ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியையொட்டியுள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சுற்றியுள்ள கிராமப்பகுதியில் சுற்றித்திரிந்தது. ஆலங்காயம் அடுத்த காவலூர், நாயக்கனூர் போன்ற பகுதிகளில் வலம் வந்த ஒற்றை யானை அங்குள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர் வகைகளை சேதப்படுத்தின.
இதனால், பெரும் இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனையடைந்தனர். இது குறித்து ஆலங்காயம் வனத்துறையினருக்கு பொதுமக்கள், விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஆலங்காயம் வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும், வனத்துறையினர் மற்றும் விவசாயிகளுக்கு போக்கு காட்டி வந்த ஒற்றை யானை காவலூர், நாயக்கனூர் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியில் சுற்றி வந்தது. இந்நிலையில், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நாயக்கனூர் பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை கண்டதும், மேள, தாளம் வாசித்து, பட்டாசு வெடித்து ஒற்றை யானையை ஆலங்காயம் மலை ரெட்டியூர் காப்புக்காட்டுக்குள் நேற்று விரட்டியடித்தனர்.