தமிழகம்

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4000 குடியிருப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

செய்திப்பிரிவு

தாம்பரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4,000 வீடுகள் அடுத்த 3 மாதங்களில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று தாம்பரத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹிதேஷ்குமார், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினர்.

இதில், மாவட்ட ஆட்சியர்கள் மா.ஆர்த்தி (காஞ்சி), ஆ.ர.ராகுல்நாத் (செங்கை), நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர்), இ.கருணாநிதி (பல்லாவரம்) மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, துணை மேயர் கோ.காமராஜ், ஆணையர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போதும், “செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்து வீடுகளும் பயன்பாட்டுக்கு வரும்.

குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு புதிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ள ஏழை, எளியோருக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.

சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் வெளியேற்றப்பட்ட 480 பேருக்கு மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட தைலாபுரம் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படும்” என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT