சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சிறப்புப் பள்ளியில் ரூ.50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம் மற்றும் கூடைப்பந்து அரங்கை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக தசைத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளின் கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், மருத்துவ உதவிகளுடன் கூடிய மாநகராட்சி சிறப்புப் பள்ளியை ஆயிரம்விளக்கு பகுதியில் 2009-ல், அப்போதைய துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் திறந்துவைத்தார்.
ரூ.50 லட்சம் மதிப்பில்..
இந்தப் பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம், மாற்றுத் திறனாளி குழந்தைகள் விளையாடுவதற்கான கூடைப்பந்து அரங்கம், 1920-ல் சென்னை மாநகராட்சித் தலைவர் சர் பிட்டி.தியாகராயரால் பள்ளி மாணவர்களுக்கு உணவுவழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
மேலும், தசைத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கி, அக்குழந்தைகளின் பயன்பாட்டுக்கான பெருநிறுவன சமூகப் பொறுப்புநிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில்,மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்புப் பேருந்து சேவையையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, இயன்முறை மருத்துவ ஆலோசனை அறை, வகுப்பறை, பெற்றோர் அறை, உளவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை அறை, மருத்துவ ஆய்வகம்,தொழிற்பயிற்சி அறை ஆகியவற்றை முதல்வர் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., எம்எல்ஏ-க்கள் நா.எழிலன், ஏ.ஜி.வெங்கடாசலம், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.