தேனி: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் எருமேலி பெருவழிப்பாதையில் 46 கி.மீ. தொலைவும், சத்திரம் வனப் பகுதியில் 12 கி.மீ. தொலைவும் கடந்துசெல்ல வேண்டும். வாகனங்களில் பம்பை வரும் பக்தர்கள் சந்நிதானம் வரை 5 கி.மீ. தொலைவு மலையேறிச் செல்ல வேண்டும்.
தற்போது மண்டல வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் பலருக்கும் மலையேற்றம் மற்றும் நெரிசலில் நிற்கும்போது உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது. இவர்களுக்காக அப்பாச்சிமேடு உள்ளிட்ட செங்குத்தான ஏற்றப் பகுதிகளில் இதய பாதிப்புக்கான முதலுதவி சிகி்ச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்நிதானத்தில் ஹோமியோபதி மருத்துவமனை, பிசியோதெரபி, உடல்வலியைப் போக்கும் மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இதுகுறித்து முதுநிலை மருத்துவ அதிகாரி பிபின் கோபால் கூறியதாவது: பெரும்பாலான பக்தர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு வயதும், ஏற்கெனவே உள்ள நோயும் காரணமாகும்.
மேலும், பயணத்தின்போது உணவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஒவ்வாமை போன்றவற்றால் வயிற்றுப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சை பெறுகின்றனர்.
மண்டல வழிபாடு தொடங்கியதில் இருந்து 8 நாட்களில் இதுவரை 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் கூறும்போது, “நீலிமலை பகுதியில் ஏறும்போது வயதானவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வெடுத்த பிறகே செல்ல வேண்டும்.
அடிக்கடி சுடுதண்ணீர் அருந்த வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளைக் கடைபிடித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார். பக்தர்கள் கூறும்போது, “கடுமையான மலையேற்றத்துடன், நெரிசலும், பல மணி நேரம் காத்திருப்பதாலும் நோயின் தன்மை அதிகமாகி விடுகிறது.
மேலும், குடிநீர், கழிப்பிட வசதிகள் குறைவாக உள்ளன. நெரிசலில் நிற்கும்போது மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் பலரும் சிரமப்படுகிறோம்” என்றனர்.