தமிழகம்

விருதுநகர் பஸ் நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

செய்திப்பிரிவு

விருதுநகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து 2 ஓட்டுநர்கள், நடத்துநர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

காரியாபட்டி அருகே உள்ள பேய்குளத்தில் இருந்து விருதுநகருக்கு நேற்று காலை அரசு பேருந்து ஒன்று சென்றது. பேய்குளத்தை அடுத்துள்ள உன்னிப்பட்டியில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஏறினர். அப்போது முன்வாசல் படியிலேயே நின்று வந்தவர்களை உள்ளே வருமாறு நடத்துநர் முத்துராஜ் (31) கூறினார். ஆனால், அவரை கேலி செய்துள்ளனர்.

ஓட்டுநர் ஜெயராமனும் மாணவர்களை அறிவுறுத்தினார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வந்ததும், கல்லூரி மாணவர்களின் செயல் குறித்து புறக்காவல் நிலையத்தில் ஓட்டுநர், நடத்துநர் புகார் அளித்தனர். அதையடுத்து, கல்லூரி மாணவர்களை போலீஸார் கண்டித்தனர். சிறிது நேரத்தில் ஓட்டுநர் ஜெயராமனிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அருகே நின்றிருந்த நடத்துநர் முத்துராஜ், மற்றொரு பேருந்து ஓட்டுநர் பெரியகருப்பன் (57) என்பவரும் தாக்கப்பட்டனர்.

இதில் காயமடைந்த ஓட்டுநர்கள் ஜெயராமன், பெரியகருப்பன், நடத்துநர் முத்துராஜ் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடினர்.

இது குறித்து ஓட்டுநர் ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT