திருட வந்த நபரை கோயில் தூணில் கட்டிவைத்த கிராம மக்கள். 
தமிழகம்

விருத்தாசலம் அருகே மணலூரில் திருட வந்த வடமாநில நபரை தூணில் கட்டிவைத்த கிராம மக்கள்

செய்திப்பிரிவு

விருத்தாசலத்தை அடுத்த மணலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது 4 பேர் அக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். தூக்ககலக்கத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி கதவை திறந்தபோது, அந்த மர்ம நபர்கள், வீட்டினுள் நுழைந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுமதியை மிரட்டியுள்ளனர். இருவரும் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் 4 பேரையும் துரத்த, அதில் ஒரு இளைஞர் பிடிபட்டார்.

ஆத்திரமடைந்த தெருவாசிகள், அந்த நபரைப் பிடித்து, அங்குள்ள மாரியம்மன் கோயில் தூணில் கட்டி வைத்து தாக்கினர். பின்னர், அங்கிருந்த சிலர் சமாதானப்படுத்த விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில், அந்த 4 பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திருட வந்ததும், அதற்காக கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் குல்பி ஐஸ் விற்று நோட்டம் விட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT