சென்னை: சென்னையில் உள்ள எம்டிசி போக்குவரத்துப் பணிமனைகள் வணிக வளாகங்களுடன் நவீனமயம் ஆக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் பிராபகர் ராஜா, வடபழனி பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், `வணிக வளாகங்களுடன் பணிமனைகளை நவீனமயமாக்கி வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திப் கீழ் உள்ள 16 பனிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சிக் குழு நிதி உதவியுடன் விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அறிக்கை தயார் செய்யப்பட்டவுடன் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று வடபழனி பேருந்து பணிமனையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்` என்று தெரிவித்தார்.