தனக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வர னுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவி யேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் கூறியிருப்பதாவது:
நீங்கள் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித் திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கையில் உள்ள தமிழ்பேசும் மக்களின் உரிமைகள், வருங்காலம் பற்றி தாங்கள் வெகுவாக சிந்தித்து செயலாற்றி வந்துள்ளீர்கள். லட்சக்கணக்கான இலங்கை தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
இலங்கை வடகிழக்கு மாகாண மக்களும் தமிழக மக்களும் சரித்திர, சமூக, கலாச்சார, சமய அடிப்படையில் நெருக்கமான உறவு கொண்டவர்கள். இந்த நெருக்கத்தின் அடிப்படையில் நமது உறவுகள் வலுவடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
உங்களைச் சந்தித்து பரஸ்பர நன்மைகள், தேவைகள், உறவுகள் பற்றி ஆராய ஆவலாக உள்ளேன். போரினால் பாதிக்கப்பட்ட எமது பெண்களின் நலத் திட்டங்கள் குறித்து உங்களுடன் பேச விரும்புகிறேன்.
இவ்வாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து அவருக்கு ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில், ‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் பெற்ற வெற்றி குறித்து உங்களது பாராட்டு கடிதத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகளான இலங் கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்களுக்கு நீதி கிடைக்க முதல்வர் என்ற முறையில் என்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்துள் ளேன். இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நிச்சயம் சந்திப்போம்
தமிழகம் மற்றும் இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் நீங்கள் என்னை சந்திக்க விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.