தமிழகம்

நெல்லை | கையில் கயிறு... - பள்ளி மாணவர்கள் இருவர் மோதலில் காயமடைந்த மாணவர் உயிரிழப்பு

அ.அருள்தாசன்

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 25 -ம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் கையில் கயிறு கட்டி இருப்பது (சாதியை அடையாளப்படும் கயிறு) தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்கிடையே பெல்டால் தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரிகிறது. இதில் 12-ம் வகுப்பு மாணவருக்கு காயம் ஏற்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அந்த 12-ம் வகுப்பு மாணவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், சம்பந்தப்பட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள் மோதல் விவகாரமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களிடம் அதிகரிக்கும் கயிறு கட்டும் பழக்கம்:

திருநெல்வேலியை பொறுத்தவரை ஒரு தரப்பு மாணவர்கள் சிலர் தங்களது சாதியைக் குறிக்கும் வகையில் கையில் கயிறை கட்டுக்கொள்ளும் பழக்கம் கடந்த 20 வருடங்களாக இருந்து வருகின்றது. பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு நடவடிக்கை காரணமாக சில ஆண்டுகள் இம்மாதிரியான நிகழ்வுகள் கட்டுக்குள் இருந்தன. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் மாணவர்கள் சிலரிடம் கயிறு கட்டும் பழக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT