தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான வழிகளைச் சொல்லாமல் மத்திய, மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வருகிறார்கள். மக்களின் கஷ்டத்தை புரிந்துகொள்ளும் அரசுகள் இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துஉள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகஆட்சியில் மின்வெட்டு இல்லை.மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது உண்மை என்பதைஒப்புக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு பிரச்சினை இருக்கும் என்பது அனைத்து மக்களிடமும் நிலவும் கருத்து. அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது மின்வெட்டு பிரச்சினை தொடங்கியுள்ளது.
ஓராண்டு கால திமுக ஆட்சியில் நிறையும் இல்லை, குறையும் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், மின்வெட்டு, நீட், விலைவாசி உயர்வு, ஆளுநருக்கும் - ஆட்சியாளருக்கும் இடையேயான போட்டி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என பல்வேறு புகார்களை அரசு மீது மக்கள் கூறி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், ஆட்சிக்குவந்ததும் அவைகளை மறந்துவிடுவதும் வாடிக்கையாக தொடர்கிறது.