தமிழகம்

கோவை | காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர்கள் இருவர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவை அருகே, சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி, பணம் பறித்த காவலர்கள் இரண்டு பேரை சூலூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை காளப்பட்டியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர், அப்பகுதியில் உள்ள அகாடமியில் படித்து வருகிறார். இவர் சூலூர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில்,‘‘கடந்த 25-ம் தேதி நீலாம்பூர் அருகே சாலையோரப் பூங்காவில் நானும், தோழியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு சீருடையில் வந்த காவலர், எங்களிடம் தகாத வார்த்தையில் பேசி, எங்களது காரில் ஏறி அமர்ந்து கொண்டு, மற்றொரு காவலரை செல்போனில் பேசி வரவழைத்தார்.

நானும், தோழியும் இருக்கும் படத்தை எடுத்து வைத்துள்ளதாகவும், இதை எங்களது பெற்றோரிடம் கூறாமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனவும் இரு காவலர்களும் மிரட்டல் விடுத்தனர். நான் அவ்வளவு தொகை இல்லை என்றதும், ரூ.10 ஆயிரம் கண்டிப்பாக தேவை என மிரட்டல் விடுத்து வாங்கிக் கொண்டனர். இரண்டு காவலர்கள் மீதும் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக, காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில், காதல் ஜோடியை மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டவர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வரும் சூலூர் கே.ஆர்.டி வீதியைச் சேர்ந்த ராஜராஜசோழன்(38) மற்றும் ஆயுதப்படை காவலரான கருமத்தம்பட்டியைச் சேர்ந்த ஜெகதீசன்(28) எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து இரு காவலர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT