சென்னை: ' கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்' என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது, விஞ்ஞானத்தின் உதவியுடன் செயல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "மதுரை மாநகராட்சியின் கழிவு நீர் வெளியேற்றும் தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் இந்தத் தொட்டிக்குள் இறக்கிவிடப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்த அவலநிலை தொடருமோ? 'கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்' என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது; விஞ்ஞானத்தின் துணைகொண்டு அதனை உடனடியாக செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை." என்று தினகரன் கூறியுள்ளார்.