ஈரோடு: தாளவாடி வனப்பகுதியில் மயங்கிக் கிடந்த பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வனப்பகுதிக்குள் யானை திரும்பியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. யானை களின் நடமாட்டம் குறித்து வேட்டைத்தடுப்பு காவலர்கள் மூலம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலப்படுகை வனப்பகுதியில், உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு யானை நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிக்குச் சென்று கண்காணித்தனர்.
அப்போது, 4 வயது மதிக்கத்தக்க பெண் யானை, நடக்க முடியாமல் மயக்க நிலையில் படுத்திருந்ததைக் கண்டனர். யானையை மருத்துவர் பரிசோதித்தபோது, குடற்புழு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூன்று மணி நேர சிகிச்சைக்குப்பின்னர், யானை உடல் நலம் தேறிய நிலையில், மெல்ல எழ முயற்சித்தது. வனத்துறை ஊழியர்கள் கயிறு கட்டி இழுத்து, யானையை எழுந்து நடக்கும்படி செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த யானை வனப்பகுதிக்குச் சென்றது. உடல்நலம் சீராகும் வரை யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.