தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

மின்வெட்டு பிரச்சினை | மத்திய அரசு மீது பழிபோடாமல் உரிய நடவடிக்கை எடுக்கவும்: டிடிவி தினகரன்

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பித்துவிட நினைக்காமல், மின்வெட்டு தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் அடித்துப் பேசிய 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நேற்று (ஏப்.20) அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இதேநிலை தொடர்ந்தால் கோடைக்காலத்தை எப்படி நகர்த்துவது என்ற அச்சமும் மக்களிடைய ஏற்பட்டுள்ளது.

மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் தடைபட்டது என்று கூறி மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துவிட நினைக்காமல், மின்வெட்டு தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று தினகரன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT