தமிழகம்

வெள்ள நிவாரணம்: தமிழக அரசு கேட்டது ரூ.6 ஆயிரம் கோடி; கிடைத்தது ரூ.352 கோடி - கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தகவல் 

செய்திப்பிரிவு

சென்னை: மழை வெள்ள நிவாரணத்திற்காக தமிழக அரசு கேட்ட ரூ.6 ஆயிரம் கோடி நிதியில் மத்திய அரசு இதுவரை வெறும் ரூ.320 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழக அரசின் வருவாய்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பெருமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாநிலங்கள் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிதியை ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவானது சம்பந்தபட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதிப்பு தொடர்பாக அறிக்கை அளிக்கும். இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் சம்பந்தபட்ட மாநிலத்திற்கு நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாநில அரசுகள் கேட்கும் நிதியை விட மிக மிகக் குறைவான நிதியைதான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி கடந்த மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய தமிழக அரசுக்கு ரூ.6230 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.352 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்தது.

இது தமிழக அரசு கேட்ட தொகையில் வெறும் 5.66 சதவீதம் என்று தமிழக அரசின் வருவாய்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT